எது வணக்கம்.?

எது வணக்கம்.?

அனேகமானவர்களின் எண்ணங்களில் வெறும்
தொழுகை,
நோன்பு,
ஜகாத்
போன்றவை மட்டுமே வணக்கம் என்பதான ஒரு பிம்பம் தோன்றும்.

கூடவே இவற்றை மட்டும் செய்வதற்காகவா நம்மை ஆண்டவன் படைத்தான்?
என்ற சந்தேகமும் எழும்.

உண்மையில் 24 மணி நேரத்தில் 5% மட்டுமே தொழுகைக்காக ஒதுக்கப்படுகிறது.
எனில் மீதி நேரம்..?

வருடத்தின் மாதங்களைக் கணக்கிட்டால் 8.5% மட்டுமே நோன்புக்காக ஒதுக்கப்படுகிறது.
எனில் மீதி நேரம்...?

ஜகாத் என்பதோ வருடத்தில் ஒருமுறை மட்டுமே.
எனில் மீதி நேரம்..?

ஹஜ் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே.
எனில் மீதி நேரம்..?

எனவே வணக்கம் என்பது வெறும் தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல...

மாறாக....

ஓர் ஏழைக்கு உணவளிக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

மத வேறுபாடு பார்க்காமல் மனிதனின் கண்ணீர் துடைக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

அமானிதம் பேணி அடுத்தவர் உரிமையில் கை வைக்காமல் இருக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

உன் நாவால் பிறரை மன வேதனைக்கு உள்ளாக்காமல் இருக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

மலர்ந்த முகத்துடன் மக்களைச் சந்திக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

கோபத்தையும் ஆத்திரத்தையும் அடக்கும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

லஞ்சம் வாங்க மறுக்கும் லட்சியவாதியாக மாறும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

உண்மையை உரக்கச் சொல்லும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

வியாபாரத்தில், கொடுக்கல் வாங்கலின்போது விட்டுக்கொடுக்கும் மனோபாவத்துடன் நடந்துகொள்ளும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

உனது வேலையில் பொறுப்புடன் நடந்துகொள்ளும்போது,
நீ வணக்கத்தில் ஈடுபட்டிருக்கின்றாய்...

இஸ்லாத்தின் பார்வையில் வணக்கம் இப்படித்தான் பட்டியலிடப்படுகிறதே தவிர..
வெறும் தொழுகையும் நோன்பும் மட்டுமல்ல!

இந்த வணக்கங்கள்தான் மற்றவர்களை இஸ்லாத்தின்பால் கவந்திழுக்குமே தவிர,

வெறும் பரப்புரைகளும்..
பயான்களும் அல்ல!

"நான் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்க வேண்டும் என்பதற்காகவேயன்றி,
வேறு எதற்கும் படைக்கவில்லை”

-அல்குர்ஆன் 51:56